கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து இழிவுபடுத்தப்பட்ட விவகாரத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி எழுப்பிய கேள்விக்கு, பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிவமோகாவில் நேற்று தேர்தல் பிரசார மாநாடு நடைபெற்றது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் , முன்னாள் மத்திய மந்திரி ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். மாநாடு தொடங்கியதும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டது. உடனே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை நிறுத்தி, முதலில் கன்னட தாய் பாடலை போடும்படி ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், இதற்கு கண்டம் தெரிவிக்கும் விதமாக திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி, தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து #ApologiseAnnamalai” எனப் பதிவிட்டிருந்தார் . அவரின் அந்த பதிவில் ‘தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களை தடுக்க முடியாத அண்ணாமலை தமிழ் மக்களை பற்றி எப்படி கவலைப்படுவார்’ என்று கேள்வியும் எழுப்பியிருந்தார்.
கனிமொழி எம்.பியின் இந்த பதிவிற்கு, பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்து பதில் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் அடித்துக் கொண்டு புரள அது தி.மு.க. மேடை இல்லை சகோதரி. ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப் பாடல் இசைக்கப்படும் என்பது நியதி. அந்த நியதியைத்தான் கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஈசுவரப்பா சுட்டிக்காட்டினார். நமது தேசிய கொடியை ஏற்றியபின் தேசிய கீதத்தை பாட வேண்டும் என்பது தெரியாத ஒரு தலைவரை வைத்துக்கொண்டு இதெல்லாம் உங்களுக்கு தேவையா?.
‘கன்னடமுங் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்’ என்ற வரியையே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இருந்து நீக்கி மாநில பிரிவினையை விதைத்த சரித்திரம் அல்லவா உங்களது. தமிழ் மக்களை உங்களிடம் இருந்தும், தி.மு.க.வினரின் மலிவான அரசியலில் இருந்தும் காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி. கவலை வேண்டாம். இவ்வாறு அதில் கூறி உள்ளார். அத்துடன் அறிவாலயத்தில் தேசியக்கொடி ஏற்றி விட்டு மரியாதை செலுத்தாமல் சென்ற வீடியோ காட்சிகளையும் பதிவிட்டுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா