தமிழ்நாடு முதலமைச்சரின் அழைப்பினை ஏற்று சென்னை, கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை ஜூன் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்கவுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பிதழ் வழங்கினார்.
இந்நிலையில் இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.4.2023) இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து, சென்னை, கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறந்து வைத்திட அழைப்பு விடுத்தார்.
முன்னதாக, கலைஞரின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் “சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்” என 3.06.2021 அன்று அறிவித்தார்.
சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1000 படுக்கைகளுடன் கூடிய, சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் ரூ.230 கோடி செலவில் இப்பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையிலும், கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவினையொட்டியும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை மேற்கண்ட விழாக்களில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் அழைப்பினை ஏற்று இந்திய குடியரசுத் தலைவர் 5.6.2023 அன்று சென்னை, கிண்டியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா மற்றும் நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள இசைவளித்துள்ளார்
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







