தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. கேரளா மற்றும் வட இந்திய மாநிலங்களில் ஓணம், துர்கா பூஜையின் உள்ளிட்ட பண்டிகையின்போது கொரோனா பரவல் அதிகமானது. இதனால் தீபாவளி சமயத்தில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நிலையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் குறைந்து வருகிறது.
மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஒரே நாளில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,09,921 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 6 பேர் இன்று உயிரிழந்தனர். இதனால் மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,226 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 937 கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நலம்பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 26,63,323 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 10,372 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டங்களைப் பொறுத்தவரை சென்னையில் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 100க்கும் குறைவாகவே பாதிப்பு பதிவாகியுள்ளது.








