பேரிடர் காலத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: மா.சுப்பிரமணியன்

பேரிடர் காலத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் 108 கட்டுப்பாட்டு மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை…

பேரிடர் காலத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் 108 கட்டுப்பாட்டு மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சென்னையில் நேற்று 13 மணி நேரத்தில் 23 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னையில் அனைத்து நீர் நிலைகளிலும் நிரம்பியுள்ளதால், வெள்ள வடிகால் நீரை கடல் உள்வாங்கி கொள்ளாத நிலை உள்ளது. இதனால், மழை நீர் தேங்கும் நிலை உள்ளது என்று தெரிவித்தார்.

மாநகராட்சி சார்பில் சென்னையில் 200 பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மா.சுப்பிரமணியன், சென்னையில் இன்று மட்டும் 408 அழைப்புகள் 108 சேவைக்கு வந்துள்ளதாகவும் கூறினார். மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சல், சளி உள்ளிட்ட சுகாதார பாதிப்புகளை எதிர்கொள்ள ரூ.120 கோடி ரூபாய் செலவிலான மருந்துகள் கையிருப்பு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, சென்னையில் மண்டலத்திற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது கூட தெரியாமல் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசியிருப்பது தேவையற்றது எனக் குறிப்பிட்ட அவர், தற்போது இருப்பது ஒரு பேரிடர் காலம், இதில் அரசியல் செய்ய வேண்டாம் என வலியுறுத்தினார். கடந்த ஆட்சியில் முறையாக ஆய்வு செய்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் கால்வாய்களை தூர்வாரும் பணியினை செய்திருந்தால் சென்னையில் இந்த அளவு மழை நீர் தேங்கியிருக்காது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுட்டிக்காட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.