இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு இன்ஜினாக செயல்படுகிறது என பிரதமர் மோடி பாராட்டியதை நினைவுகூர்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தின் நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, பெரியகருப்பன், சக்கரபாணி, கீதாஜீவன், சாமிநாதன், காந்தி, கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உயர்கல்வி, கூட்டுறவு, உணவு, சமூக நலன், தொழிலாளர் நலன், ஜவுளி உள்ளிட்ட துறைகளில் செயல்படுத்தி வரும், செயல்படுத்தவுள்ள முக்கிய திட்டங்கள் குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படும் சில திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாகவும், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் சுனாமி வேகத்தில் நடைபெறும் என்பதை நிறைவேற்றிக் காட்டியுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : பனைமரத்தின் சிறப்பை விளக்கும் “நெட்டே நெட்டே பனைமரமே” – புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு இன்ஜினாக செயல்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி மனம் திறந்து பாராட்டியதை நினைவுகூர்வதாகவும் கூறினார். பிரச்னைகளுக்கு இடம்தராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர்களுக்கும், அலுவலர்களுக்கும் அறிவுறுத்திய முதலமைச்சர், அனைத்துத் துறை அலுவலர்களும் அரசு மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.







