”மாமன்னனுக்கு தடை இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

நாளை வெளியாக உள்ள மாமன்னன் திரைப்படத்திற்கு தடை  இல்லை என மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படம் நாளை…

நாளை வெளியாக உள்ள மாமன்னன் திரைப்படத்திற்கு தடை  இல்லை என மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தை வெளியிட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நாளை வெளியாக உள்ள மாமன்னன் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி ஓ.டி.எஸ். பிலிம்ஸ் உரிமையாளர் ராமசரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘ஏஞ்சல்’ என்ற திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. ‘ஏஞ்சல்’ படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் மீதமுள்ள 20 சதவீத படப்பிடிப்புக்கு ஒப்பந்தப்படி உதயநிதி ஸ்டாலின் கால்ஷீட் தரவில்லை என கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி ‘மாமன்னன்’ திரைப்படம்தான் தனது கடைசி படம் என்று கூறியுள்ளார். ‘ஏஞ்சல்’ படத்துக்கு இதுவரை 13 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ‘ஏஞ்சல்’ படத்தை முடிக்காமல் ‘மாமன்னன்’ படத்தை வெளியிட்டால் தமக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும். ஒப்பந்தப்படி, இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் உள்ளது. அதனை தராமல் உதயநிதி ஸ்டாலின் புறக்கணித்து வருகிறார். அதனால் எனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக எனக்கு 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை ‘மாமன்னன்’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன் கடந்த 23ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்த போது உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை அடுத்து, ஜூன் 28ம் தேதிக்குள் பதிலளிக்க உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

இந்த நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தரப்பில், உதயநிதி ஸ்டாலின் இந்த நிறுவனத்தின் பங்குதாரர் இல்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்தின் கூட்டு நிறுவனம் மூலம் மாமன்னன் திரைப்படம் தயாரிக்கப்பட்டதாகவும், ஏஞ்சல் திரைப்படத்திற்கு வாய்மொழி ஒப்பந்தம் மட்டும்தான் போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் வாதங்களை கேட்ட நீதிபதி, மாமன்னன் திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். மேலும், ஏஞ்சல் திரைப்படத்தில் உதயநிதி நடிப்பது குறித்து பின்னர் உத்தரவிடப்படும் எனக்கூறிய நீதிபதி, மாமன்னம் திரைப்படத்திற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.