ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்த 21 மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி வந்த நிலையில், அதில் 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது
கடந்த ஜூன் மாத நிலவரப்படி ஆளுநரின் ஒப்புதலுக்காக சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்கள் நிலுவையில் இருந்தது. ஆளுநர் ஆர்.என். ரவியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கும்போதேல்லாம் நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி வந்தார்.
தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள மசோதாக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததை கண்டித்து திமுகவின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியில் தலையங்கங்கள் எல்லாம் வெளிவந்துள்ளன. இந்நிலையில், அதில் 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகின்றது.
இதில், பல்கலைக்கழக வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலான 8 மசோதாக்கள், கூட்டுறவுச் சங்கங்கள் பதவிக் காலத்தைக் குறைக்கும் சட்ட மசோதா, அடுக்குமாடி குடியிருப்பு உரிமை மசோதா, தமிழ்ப் பல்கலைக்கழக திருத்த மசோதா ஆகியவை நிலுவையில் உள்ளதாக கூறப்படுகின்றது.
இலா. தேவா இக்னேசியஸ் சிரில்








