தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் சிறுதானிய திருவிழாவிற்கு ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர், கம்பு, கேழ்வரகு, வரகு, சோளம், பனி வரகு, தினை, குதிரைவாலி, சாமை ஆகியவை சிறு, குறு தானியங்கள், சிறுதானியங்கள் வறட்சியிலும் வளர்பவை. வளமற்ற மண்ணிலும் நலம்பெற்று துளிர்ப்பவை. ஊட்டச்சத்து நிறைந்தவை.
தமிழ்நாட்டில் அவற்றை மீண்டும் செழிக்க செய்யும் பொருட்டும், சிறுதானிய பரப்பு, உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றை அதிகரிக்கும் பொருட்டும், கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் 20 மாவட்டங்களை உள்ளடக்கி அறிவிக்கப்பட்ட 2 சிறு தானிய மண்டலங்களுடன் உழவர்களின் கோரிக்கைகளை ஏற்று, நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்கள் புதிதாக சேர்த்துக்கொள்ளப்படும்.
சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நீலகிரி, தருமபுரி மாவட்டங்களிலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க செய்திட கூட்டுறவு சங்கங்கள் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட குறு தானிய்ஙகள் கொள்முதல் செய்யப்பட்டு சென்னை, கோயம்புத்தூர் மாநகர அமுதம், சிந்தாமணி, காமதேனு கூட்டுறவு விற்பனை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2023ம் ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருப்பதை ஒட்டி, தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த இயக்கத்தில், வரும் ஆண்டில் தரிசு நிலங்களை சீர்திருத்தம் செய்தும், மாற்றுப்பயிர் சாகுடி மூலமாகவும் 50,000 ஏக்கரில் சிறுதானிய சாகுபடி மேற்கொள்ளவும், சிறுதானிய விவசாயிகளை ஒன்றிணைத்து 100 சிறுதானிய உற்பத்திக் குழுக்களை உருவாக்கி பயிற்சி அளிப்பதற்கும், 12,500 ஏக்கரில் தெளிப்பு நீர்பாசனம் அமைக்கவும் மானியம் அளிக்கப்படும்.
சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய ஏதுவாக சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய உதவி அளிக்கப்படும். மக்களிடையே சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சிறுதானிய திருவிழாக்களும் இவ்வியக்கத்தின் மூலம் நடத்தப்படும்.







