2021ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
16 நாடுகள் பங்கேற்கும் 7வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் , இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்தியாவில் கொரோனா தொற்று 2ம் அலை பரவலால் போட்டியை நடத்தமுடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும், 3ம் அலை உருவாகக்கூடும் எனவும் வல்லுநர்கள் கணித்துள்ளதால், போட்டியை வேறு நாட்டிற்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
போட்டியை நடத்துவது குறித்து கருத்து தெரிவிக்க இன்றே (ஜூன் 28) கடைசி நாள் என பிசிசிஐ-க்கு ஐசிசி கெடு விதித்திருந்தது. இந்நிலையில், டி20 உலக்கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐசிசி-யிடம் இன்று தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறிய அவர், போட்டி அட்டவணை மற்றும் தேதி உள்ளிட்டவற்றை ஐசிசி-யே அறிவிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.







