பெகாசஸ் ஒட்டுகேட்பு வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பை வழங்குகிறது.
பெகாசஸ் ஒட்டுகேட்பு தொடர்பான தகவல்களை “The Wire” இணையதளம் வெளியிட்டிருந்தது. அதில் அரசியல், நீதி துறை என சுமார் 142 முக்கிய நபர்களின் தொலைப்பேசி அழைப்புகள் ஒட்டுகேட்கப்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்தது.
இதில் ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர், மத்திய அமைச்சர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர், 40 மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் உட்பட 100 க்கு மேற்பட்டவர்களின் அழைப்புகள் ஒட்டுகேட்கப்பட்டதாக The Wire தெரிவித்திருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த மாத விசாரணையின் போது, நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெகாசஸ் உளவு மென்பொருளை மத்திய அரசு பயன்படுத்தியதா, இல்லையா என்பதை பிரமாண பத்திரத்தில் தெரிவிக்க முடியாது என மத்திய அரசு சார்பில் தெரிவித்திருந்தது. ஆனால், குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க நிபுணர்கள் குழு அமைக்க தயாராக உள்ளதாகவும், அந்த குழு நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்யவும் இசைவு தெரிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து, பெகசாஸ் விவகாரத்தில் விசாரணை கோரி தாக்கல் செய்தவர்களின் வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இடைக்கால உத்தரவு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பிறப்பிக்கப்படும் என குறிப்பிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது.








