அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: வழக்கு கடந்து வந்த பாதை!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்து வந்த பாதை குறித்த சிறு தொகுப்பை காணலாம்… டெல்லியில் 864 மதுக்கடைகள்…

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்து வந்த பாதை குறித்த சிறு தொகுப்பை காணலாம்…

டெல்லியில் 864 மதுக்கடைகள் இருந்த நிலையில், அவற்றில் 475 அரசுக்கு சொந்தமானவையாக இருந்தன. கடந்த 2021 நவம்பரில் டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. அதன்படி, அரசு மது விற்பனையில் இருந்து முற்றிலும் வெளியேறி,  முழுவதுமாக தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த புதிய மதுபானக் கொள்ளையின் மூலம், ஒருபுறம் தொழிலதிபர்களுக்கு பெரிய அளவில் வருவாய் கிடைத்தாலும், மறுபுறம் மதுபான விற்பனையிலிருந்து அரசுக்கு கிடைக்கும் கலால் வரி வருமானம் பெருமளவு குறைந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

முன்னதாக, டெல்லி அரசு ரூ.530 மதிப்புள்ள ஒரு பாட்டிலுக்கு கலால் வரியாக ரூ.223.89 வசூலித்தது. ஆனால் புதிய கொள்கையில், மொத்த விற்பனை விலையின் மீதான கலால் வரியை அரசாங்கம் பாட்டிலின் விலையில் வெறும் 1% ஆகக் குறைத்தது. எனவே, மது வியாபாரிகள் ரூ.530 மதிப்புள்ள ஒரு பாட்டிலுக்கு ரூ.1.88 கலால் வரி மட்டுமே செலுத்தினர்.  அதேசமயம், ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் வரியாக ரூ.30 வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து, 2022 ஜூலை 8 அன்று, அப்போதைய டெல்லியின் தலைமைச் செயலாளர் நரேஷ்குமார்,  துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவிடம் அறிக்கை சமர்ப்பித்தார். இதில் மனீஷ் சிசோடியா, அரசுக்கு வருமான இழப்பை ஏற்படுத்தும் வகையில் தவறான முறையில் மதுக் கொள்கையை அமல்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. 

டெல்லி தலைமைச் செயலாளரின் அறிக்கையின் அடிப்படையில் டெல்லி துணைநிலை ஆளுநர் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.  2022, ஆகஸ்ட் 12-ம் தேதியன்று சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதில், மணீஷ் சிசோடியா, 3 முன்னாள் அரசு அதிகாரிகள், 9 தொழிலதிபர்கள் மற்றும் 2 நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஊழலில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் ஈடுபட்டது. வழக்கை பதிவு செய்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி கைது செய்தனர்.

மதுபான ஊழல் வழக்கில் இது வரை மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகள்

    • நவம்பர் 2021: அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், டெல்லி அரசாங்கம் புதிய கலால் கொள்கையை அறிமுகப்படுத்தியது.
    • ஜூலை 2022: டெல்லியின் தலைமைச் செயலாளர் கடுமையான கொள்கை மீறல் நடந்ததாக புகாரளித்தார். இதன் அடிப்படையில் டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா விதி மீறல் குறித்து சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை விடுத்தார்.
    • ஆகஸ்ட் 2022: டெல்லி துணை நிலை ஆளுநரின் பரிந்துரையின் பேரில் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மற்றும் பலர் மீது சிபிஐ ரெய்டு, அதைத் தொடர்ந்து மதுபானக் கொள்கை மீதான அமலாக்க இயக்குநரகத்தின் பணமோசடி விசாரணை.
    • செப்டம்பர் 2022: 27-ம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்புத் தலைவர் விஜய் நாயரை சிபிஐ கைது செய்தது. அடுத்த நாளே சமீர் மகேந்திருவை அமலாக்கத்துறை கைது செய்தது.
    •  பிப்ரவரி 2023: 26-ம் தேதி டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்தது. 
    • அக்டோபர் 2023: ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார், மேலும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதல் சம்மன் அனுப்பப்பட்டது. சஞ்சய் சிங் அக்டோபர் 4-ம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
    • நவம்பர் 2023: 2-ம் தேதியன்று, கெஜ்ரிவால் அமலாக்கத்துறையின் முதல் சம்மனுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக அரசியல் பேரணியில் உரையாற்றுவதற்காக மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிங்ராலிக்கு சென்றார்.
    • டிசம்பர் 2023: இரண்டாவது சம்மனை புறக்கணித்ததுடன், “இது சட்டவிரோதமானது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது” என கெஜ்ரிவால் தெரிவித்தார்.
    • ஜனவரி 2024: ஜனவரி 3-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு மூன்றாவது சம்மன் அனுப்பியது.
    • ஜனவரி 2024: அரவிந்த் கெஜ்ரிவால் ஜனவரி 18-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு 4வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது.
    • பிப்ரவரி 2024:  5-வது முறையாக, அமலாக்க இயக்குநரகத்தின் சம்மனை கெஜ்ரிவால் புறக்கணித்தார். பிப்ரவரி 2024 இல் டெல்லி நீதிமன்றம் நேரில் ஆஜராவதில் இருந்து கெஜ்ரிவாலுக்கு ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 6வது சம்மன் அளிக்கப்பட்டது.
    • மார்ச் 2024: இறுதியாக 8வது சம்மன் வரை அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. மார்ச் 15ம் தேதியன்று, தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சி.ஆரின் மகள் கவிதா கைது செய்யப்பட்டார்.
    • மார்ச் 2024 : டெல்லி ரோஸ்வியூ அவென்யூ நீதிமன்றத்தில் சட்டவிதிகள் 174ன் கீழ் மனு அளித்த அமலாக்கத்துறை கட்டாயம் கெஜ்ரிவால் ஆஜாராகி விளக்கமளிக்க வலியுறுத்தியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற மார்ச் 16-ம் தேதி ஆஜராகும் படி கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது.  அமலாக்கத்துறை தவிர்த்து கெஜ்ரிவாலுக்கு இது நீதிமன்றம் அனுப்பிய 2வது சம்மன்.
    • மார்ச் 2024 : அரவிந்த் கெஜ்ரிவால் 21-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லாது என அறிவிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    • ஏப்ரல் 2024 : ஏப். 9-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. தான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
    • ஏப். 10-ம் தேதி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
    • மே 2024 : இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ஜூன் 1-ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும் ஜூன் 2-ம் தேதி ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.