‘Man Blowing Turha’ சின்னத்தை பயன்படுத்த சரத் பவார் கட்சிக்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் சரத் பவார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் இருந்த சரத் பவார் பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். மகாராஷ்டிராவில் முக்கிய கட்சியாக இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் கடந்த ஆண்டு உள்கட்சி மோதல் வெடித்தது. சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், கட்சியை உடைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசில் இணைந்து துணை முதலமைச்சர் ஆனார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சரத்பவாரும், அஜித் பவாரும் உரிமை கொண்டாடி வந்தனர். இருதரப்பிலும் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், 53 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 41 எம்.எல்.ஏ.க்கள் அஜித் பவாருக்கும், 12 பேர் சரத் பவாருக்கும் ஆதரவு தெரிவித்தனர்.
இதனையடுத்து அதிக ஆதரவு உள்ள அஜித்பவாருக்கு கடிகார சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனையடுத்து சரத்பவார் தனக்கு விருப்பமான பெயரை தேர்வு செய்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மூன்று பெயர்கள் சரத்பவார் தரப்பில் வழங்கப்பட்ட நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி-சரத்சந்திர பவார் என்ற பெயரை தேர்தல் ஆணையம் வழங்கியது. மேலும் துர்ஹா எனும் இசைக்கருவியை முழங்கும் மனிதனின் சின்னம் சரத் பவாருக்கு ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அரசியல் ஆதாயத்துக்காக சரத் பவாரின் புகைப் படங்கள் மற்றும் பெயரை தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி அவரின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில் சரத் பவாரின் பெயர், படங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என்ற திட்டவட்டமான மற்றும் நிபந்தனையற்ற உறுதிமொழி எங்களுக்குத் தேவை எனவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவாரின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ தேர்தல் பிரச்சாரப் பொருட்களில் அஜித் பவார் கட்சியினர் பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் சரத்பவார் கட்சிக்கு ‘Man Blowing Turha’ சின்னத்தை அனைத்து தேர்தல்களுக்கு வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த சின்னத்தை வேறு எந்த கட்சிகளுக்கும் வழங்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.