என்எல்சிக்கு எதிராக கடலூர் மாவட்டம் முழுவதும் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இது என்.எல்.சி நிலம் எடுப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மட்டும் நடத்தப்படும் போராட்டம் அல்ல. வளையமாதேவி கீழ்பாதி கிராமத்தில் விவசாயிகளின் நிலத்தை கட்டுப்பாட்டில் எடுத்துள்ள என்.எல்.சியின் அத்துமீறல்களையும், மாவட்ட நிர்வாகத்தின் நாடகத்தையும் மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என கூறியுள்ளார். வளையமாதேவி கீழ்பாதி கிராமத்தில் உரிய இழப்பீடு வழங்காமலேயே ஏழை, நடுத்தர விவசாயிகளின் நிலங்களைப் பறிப்பது அதிகார அத்துமீறலின் உச்சமாகும் என சாடியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விவசாயிகளையும், பொதுமக்களையும் கிள்ளுக்கீரையாக கருதும் என்.எல்.சிக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பாடம் புகட்டுவதற்காக நாளை கடலூர் மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு விடுத்துள்ளதாக கூறியுள்ள அவர், நாளைய முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள், வணிகர்கள், தொழிற்சங்கங்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அதே நேரத்தில் மருத்துவம், பால் உள்ளிட்ட இன்றியமையா தேவைகளுக்கும், 12ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கும் எந்த இடையூறும் ஏற்படாது என அன்புமணி ராமதாஸ் உறுதியளித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா