சிவகங்கை அருகே விவசாய நிலத்தில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட மருத்துவ மாணவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ். இவரது இரு மகன்கள் கிரிஸ்டோபர், ஜோசப் ஆகியோர் வெளிநாட்டில் மருத்துவம் படித்துவந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் இருவரும் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இந்நிலையில் தங்களது விவசாய நிலத்தில் சிலர் மது அருந்தி தகராறில் ஈடுபடுவதாக வந்த தகவலையடுத்து தனது தந்தை இருதயராஜுடன் விவசாய நிலத்திற்கு இருவரும் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்தவர்களை 3 பேரும் தட்டிக்கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் 3 பேரையும் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக தாக்கினர். இதில் கிரிஸ்டோபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அக்கப்பக்கத்தினர் படுகாயமடைந்த இருதயராஜ் மற்றும் அவரது மற்றொரு மகன் ஜோசப்பை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து தகவலறிந்த சிவகங்கை போலீசார் வழக்குப் பதிவுசெய்து தப்பியோடிய கும்பலை தேடிவருகின்றனர்.








