தமிழ்நாட்டில் தீபாவளிக்கு கடும் கட்டுப்பாடு: விதிகளை மீறினால் சிறை!

தமிழ்நாடு அரசு விதித்துள்ள விதிமுறையை மீறி பட்டாசுகளை வெடிப்பவர்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது என போலீஸார் எச்சரித்துள்ளனர். விதிகளை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு…

தமிழ்நாடு அரசு விதித்துள்ள விதிமுறையை மீறி பட்டாசுகளை வெடிப்பவர்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

விதிகளை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்நாடு முழுவதும் முழு அளவில் தயாராக இருக்கும்படி போலீஸாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பட்டாசு வெடிக்க தமிழ்நாடு அரசு விதித்துள்ள நேரக் கட்டுப்பாட்டை அமல்படுத்தும் வகையில், தமிழ்நாடு முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு இரண்டு மணிநேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதில் எந்த இரண்டு மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பதை அந்தந்த மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த உத்தரவின்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இந்த ஆண்டும் பட்டாசு வெடிக்க இதே நேரக் கட்டுப்பாட்டை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. விதிமுறையை மீறி பட்டாசுகளை வெடிப்பவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188வது சட்டப் பிரிவின்படி 6 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்க வழிவகை உள்ளது.

தீபாவளி பண்டிகையின்போது தமிழ்நாடு அரசு விதித்த நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவா்கள் மீது கடந்த 5 ஆண்டுகளாக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கு இந்திய தண்டனைச் சட்டம் 188-ன் படி பதிவு செய்யப்படுகிறது. தடை செய்யப்பட்ட மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பட்டாசு வெடிப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 285-ன் படி வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.

நேரக் கட்டுப்பாட்டையும், தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க விதிக்கப்பட்ட தடையையும் அமல்படுத்துவது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் ஆலோசித்தனர். இதில் கடந்த ஆண்டுகளைப் போன்றே இந்த ஆண்டும் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீதும், மருத்துவமனை, வழிப்பாட்டு ஸ்தலங்கள், வணிக வளாகங்கள், குடிசைப் பகுதிகள் போன்ற தடை செய்யப்பட்ட இடங்கள் அருகே பட்டாசு வெடிப்பவர்கள் மீதும், அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசு வெடிப்பவர்கள் மீதும் வழக்குப் பதிவதற்கு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் ஒரு தனிப்படை வழக்கம்போல அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் அந்தந்தப் பகுதியில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். விதிகளை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப் பதிவார்கள் என தமிழ்நாடு காவல் துறையைச் சோ்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.