தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 2ம் நாளான நேற்று மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் நாள் முழுவதும் பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
3வது நாளாக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். காலை 10 மணிக்கு அவை தொடங்கியது முதல் எதிர்க்கட்சி அறையில் இருந்த எடப்பாடி பழனிசாமி தற்போது அவைக்குள் சென்றார். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது என்று எடப்பாடி பழனிச்சாமி பேச ஆரம்பித்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர், உங்களுக்கான வாய்ப்பு வரும் போது வாய்ப்பு தருகிறேன் என்று கூறினார். வேறு நோக்கத்துடன் பேச முயற்சிக்கிறீர்களா? எனக்கு எந்தவித ஆதாரத்தையும் தரவில்லை, எந்த சம்பவம் என்றாலும் குறிப்பிட்டு சொல்லுங்கள் என்று கூறினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் சட்டம் ஒழுங்கு கெட்டதாக சொல்கிறார். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சட்ட ஒழுங்கு பிரச்னைகள் பட்டியல் வைத்துள்ளேன். அவர் பேசிய பிறகு நான் உரிய பதிலளிக்கிறேன் என்று கூறினார்.
மேலும், நேரமில்லா நேரத்தை பயன்படுத்தி பிரச்னை எழுப்ப வேண்டும் என்றால் சபாநாயகரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பது மரபு. அது தொடர்பாக உங்களிடம் அனுமதி பெற்றிருக்கிறார்களா? என சபாநாயகரிடம் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.
தனபால் சபாநாயகராக இருந்த போது முறையாக அனுமதி பெற்று தான் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது பேசியுள்ளேன் என முதலமைச்சர் கூறினார்.
அப்போது பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, சபாநாயகரை சந்தித்து முறையாக அனுமதி கோரியுள்ளோம்.
எடப்பாடி பழனிசாமியை பேச அனுமதியுங்கள் நான் ஓடி ஒளிய போவதில்லை. தயாராக இருக்கிறேன் என முதலமைச்சர் கூறினார்.
தொடர்ந்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விருகம்பாக்கம் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. பெண் காவலர் மீது இரு திமுகவினர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெண் காவலர் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் உடனடியாக கைது செய்யப்படவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் இருப்பது வருத்தத்திற்குரியது. மக்கள் மட்டுமல்ல, காவலர்களும் அச்சத்தில் உள்ளனர்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், பெண் காவலர் புகார் அளித்ததும் FIR போடப்பட்டுள்ளது. பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவில் பதிவான வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டது. சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர். அடுத்த நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர். 72 மணி நேரத்தில் கைது செய்து அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுத்ததுண்டா? என கேள்வி எழுப்பினார். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.