ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல்பத்து ஆறாம் நாளான இன்று மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
108 திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 22ம் தேதி தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி, வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் அனைத்து நாட்களிலும், மூலவர் ரெங்கநாதர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார். பகல் பத்து உற்சவத்தின் போது உற்சவர் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து உற்சவத்தின்போது திருமாமணி மண்டபம் என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் ஆழ்வார்களுடன் எழுந்தருளி அருள்புரிவார்.திருவிழாவின் பகல் பத்து 6ம் நாள் விழாவான இன்று அர்ச்சுன மண்டபத்தில் சிகப்பு சிக்குத் தாடையில் வரதன் கலிங்கத்துராய், சூரியசந்திர வில்லைகள், ஓட்டியான காப்பு சாற்றி, பங்குனி உத்திர பதக்கம், வைஜயந்தி பதக்கம், அடுக்கு பதக்கங்கள், அரை சலங்கை, மகர கர்ண பத்ரம், வைர அபயஹஸ்தத்துடன், வெண்பட்டு வஸ்திரம், 2 வட பெரிய முத்து சரம், நெல்லிக்காய் பொட்டு மாலை, தங்கப்பூண் பவள மாலை, பின் சேவையாக மகரி பதக்கம், புஜ கீர்த்தி, தாயத்த தொங்கல் கைகளில் சாற்றி உள்ளிட்ட ஆபரங்களை அணிந்து அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பகல்பத்தின் கடைசிநாளான ஜனவரி 1ம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி தருகிறார். அதைத்தொடர்ந்து ராப்பத்து விழாவின் முதல் நாளான 2ம் தேதி முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு நடைபெறவுள்ளது.