தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 5 இலங்கை தமிழர்கள் இன்று காலை
ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரைக்கு அகதிகளாக வந்து உள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து 212 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இலங்கை கிளிநொச்சி மாவட்டம் பாரதிபுரத்தை சேர்ந்த பாரதி டிஸ்,
அவரது தாய் முனியம்மா, அவரது இரண்டு மகன்கள் ஒரு மகள் என ஒரே குடும்பத்தை
சேர்ந்த 5 பேர் இலங்கை கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா கடற்கரையில் இருந்து
நேற்று காலை பைபர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை ராமேஸ்வரம் அடுத்துள்ள
சேராங்கோட்டை கடற்கரையில் வந்திறங்கினர்.
தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் போலீசார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து அத்தியாவசிய
பொருட்களின் விலை சற்று குறைந்த வந்த நிலையில் தற்போது இலங்கை அரசிடம் போதிய டாலர் கையிருப்பில் இல்லாததால் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு
மக்கள் எரிபொருளுக்காக சாலையில் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் மீண்டும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய
பொருட்களின் விலை உயர்வால் குழந்தைகளுடன் இலங்கையில் வாழ வழி இன்றி
தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்தனர்.
பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 5 பேரும் மண்டபம் அகதிகள்
முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு
இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது
குறிப்பிடத்தக்கது.