தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் அறிவித்தபடி, ராமேஸ்வரம் முதல் காசி வரையிலான ஆன்மீக பயணத் திட்டத்தை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் அறிவித்தபடி, தமிழ்நாடு முழுவதிலும் இருந்து இந்து சமய அறநிலையத்துறையின் ஏற்பாட்டில் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டு, ராமேஸ்வரம் முதல் காசி வரை இலவசமாக ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அந்த வகையில், மயிலாடுதுறை இணை ஆணையர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து, 12 பக்தர்கள் இந்த ஆன்மீகப் பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலில் இருந்து, வேன் மூலம் ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படியுங்கள் : கடலூரில் சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி – பெண் தலைமறைவு
முன்னதாக, கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன் மற்றும் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளவுள்ள பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, ஆன்மீகப் பயணத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மார்ச் 2-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தரிசனத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து காசிக்கு ரயில் மூலம் புனித பயணத்தை தொடங்கும் பக்தர்கள், மீண்டும் மார்ச் 9 ஆம் தேதி மயிலாடுதுறை திரும்புகின்றனர்
– கு.பாலமுருகன்.







