சேலத்தில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை! ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு!

மழை வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சேலத்தில் சிறப்பு கூட்டுத் தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.  பொதுவாக கோடை காலத்தில்…

மழை வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சேலத்தில் சிறப்பு கூட்டுத் தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.  பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும்.  ஆனால்,  இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கோடை வெயில் வாட்டி எடுக்கும் நிலையிலும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து,  வெப்ப அலை வீசுவதாலும் போதிய மழை இல்லாதாலும் பொதுமக்கள் மிகவும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் வெயில்  100 டிகிரியை கடந்துள்ளது.  எப்போதும் இல்லாத வகையில் கோடை வெயில் சுட்டெரித்து வருவதுடன் தொடர்ச்சியாக 13மாவட்டங்களில் 1௦௦ டிகிரியைத் தாண்டி வெயில் பதிவாகிவருகிறது. கோடை வெயிலின் காரணமாக முக்கியமான நீர்த்தேக்கங்களில் கடந்தை ஆண்டை விட இந்த ஆண்டு கொள்ளளவு குறைந்துள்ளது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

இதையும் படியுங்கள் : டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் : VPN மூலம் ரஷ்யா டொமைன் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம்!

இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் குறையவும் மழை வேண்டியும் சேலம்  கோட்டை பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறப்பு கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர்.  இந்த நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட  இஸ்லாமியப் பெருமக்கள் பங்கேற்று தமிழ்நாட்டில் மழை பெய்து வளம்பெருக வேண்டி நபிவழியில் சிறப்பு கூட்டு தொழுகை நடத்தினர்.  இந்த சிறப்பு கூட்டுத் தொழுகையில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.