இந்திக்கு எதிராக ஏறி ஆடும் தென்னிந்திய கலைஞர்கள்!

மத்தியில் இருப்பவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்திதான் இணைப்பு மொழி, இந்திதான் தேசிய மொழி எனும் அஸ்திரத்தை நேரடியாகவோ மறைமுகவோ தொடுப்பது வழக்கம். அதற்கு எதிராக தெற்கில் இருந்து பல அம்புகள் தொடுக்கப்படும். அந்த…

மத்தியில் இருப்பவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்திதான் இணைப்பு மொழி, இந்திதான் தேசிய மொழி எனும் அஸ்திரத்தை நேரடியாகவோ மறைமுகவோ தொடுப்பது வழக்கம். அதற்கு எதிராக தெற்கில் இருந்து பல அம்புகள் தொடுக்கப்படும். அந்த அம்புகள் வடக்கில் இருந்து வரும் அஸ்திரத்தை பிளந்து சென்று ‘இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ எனும் சேதியை (மீம் கிரியேட்டர்கள் மொழியில் சொல்ல வேண்டும் என்றால், ஏக் காவ் மேம் ஏக் கிசான் ரகதாத்தா ) சொல்லிவிடும். டைம் லூப்பில் நடப்பது போல் இதுவே மீண்டும் மீண்டும் ரிப்பீட் அகும்!

ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை இணைப்பு மொழியாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதில் இருந்தே இந்த ஆண்டுக்கான இந்தி திணிப்பு சர்ச்சை சீறும் சிறப்புமாக தொடங்கிவிட்டது. பொதுவாக அரசியல் ஆளுமைகளின் இதுபோன்ற கருத்துகளையெல்லாம் எதிர் தரப்பு கட்சிகள் தான் ‘டீல்’ செய்துகொள்வார்கள். திரைப்பிரபலங்களிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினால், ‘இது உங்க பிரச்சன குமாரு..நங்க உள்ள பூந்தா கேங் வாரா மாறிடும்’ என்பது போல் அமைதியாக கடந்துவிடுவார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக திரை பிரபலங்களே ‘பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா!’ என ஆவேசத்துடன் சங்கிலியை அறுத்துக்கொண்டு ட்விட்டர், பேஸ்புக் என தங்களுக்கு வாகுவாக உள்ள இடங்களில் எல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ கருத்துக்களை கூறி வருகின்றனர்.

 

அந்த கேங்கிற்கு லீடரே ஏ.ஆர். ரஹ்மான் தான் என்று கூறும் அளவுக்கு இந்தி திணிப்புக்கு எதிராக கடந்த காலங்களில் பல சாகசங்களை செய்துள்ளார் ரஹ்மான். இந்தாண்டுக்கான இந்தி சர்ச்சையை பற்றி கேட்ட போது கூட ‘தமிழ் தான் இணைப்பு மொழி’ என ஒரே போடாக போட்டுவிட்டு கூலாக காரில் ஏறி கிளம்பினார். போதாக்குறைக்கு திராவிட நிற தமிழனங்கு ஓவியத்தை பகிர்ந்து எத்திசையும் புகழ் மணக்க வைத்தார். அடுத்த சில நாட்களிலேயே கருப்பு திராவிடன், பெருமை மிகு தமிழன் என இன்னொரு
வெடியை கொளுத்தி போட்டார் இசை அரக்கன் யுவன்! தெற்கிலிருந்து தொடங்கிய இந்த தமிழ் குரல் அப்படியே வடக்கு நோக்கி கன்னடம் தொலுங்கு என வெவ்வேறு வடிவங்களில் மாறி பரவத்தொடங்கியது.

நிற்க, எந்த ஒரு மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் கலை ஒரு முக்கிய பங்காற்றி வந்திருக்கிறது என்பதே வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. கலை படைப்புகளின் மூலமாக எந்த வொரு சிந்தனைகளையும்
கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்துவிடலாம் என்பதும் கண்கூடு. கடந்த சில ஆண்டுகளாக தென்னகத்தில் இருந்து உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு நாடு தாண்டிய வரவேற்பு இருப்பதை கண்டு வருகிறோம். இந்தியா என்றாலே இந்தி தான் தேசிய மொழி என்ற உலக நாடுகளில் நம்பப்படுவதற்கு இந்தி சினிமாவின் ஆதிக்கமும் ஒரு காரணம் என்ற கருத்துக்களும் உண்டு.

இந்நிலையில், கர்நாடகாவை மையமாக கொண்டு PAN இந்தியா படமாக தயாரான கே.ஜி.எஃப் 1000 கோடிகளை தாண்டி உலகம் முழுவதும் சக்கை போட்டு போட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் ஆயிரம் கோடிகளை தாண்டிய படங்கள் நான்கு. அதில்
தங்கல் தவிர மற்ற மூன்று படங்களும்(பாகுபலி-2, RRR உட்பட) தென்னிந்திய மாநிலகளை மையமாக கொண்டு உருவான படங்கள் தான். இந்த சரித்திர சம்பவங்களை பாலிவுட் வட்டாரங்கள் கடும் புகைச்சலில் இருப்பதாகவே கடந்த சில தினங்களாக
பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்த நடிகர் கிச்சா சுதீப், விழா ஒன்றில் பேசும் போது, இந்தி என்பது தேசிய மொழி அல்ல. தென்னிந்திய மொழி திரைப்படங்கள் எல்லா இடங்களிலும் வெற்றி பெறுகின்றன” என்று தெரிவித்தார்.

உடனே களத்தில்(ட்விட்டரில்) குதித்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ‘ஹிந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால் நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இங்கு டப் செய்து வெளியிடுகிறீர்கள்?’ என்ற விசித்திரமான ஒரு கேள்வியை கேட்டார். மேலும், ஹிந்தி முன்பும் இப்போதும் இனிமேலும் தேசிய மொழியாக இருக்கும்” எனவும் குறிப்பிட்டார். இந்தி தான் தேசிய மொழி எனக்கூறிவிட்டு அடுத்த வரியிலேயே பெங்காலி மொழியில் இயற்றப்பட்ட நமது தேசிய கீதமான ‘ஜன கண மன’
பாடல் வரிகளை பதிவு செய்தார். இதைக்கண்ட தென்னிந்திய இணையவாசிகள் எல்லாம், அவரை பிளு பிளுவென பிடித்து, ‘பூமர் ஆக்டர்ர்ர்…பூமர் ஆக்டர்ர்ர்ர்’ என கலாய்க்கத் தொடங்கினார்கள்.

 

இதற்கு, என்னுடைய நோக்கம் இந்தியை உங்களை புண்படுத்துவது அல்ல, என்னுடைய கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுள்ளது என்று கூறி கைகொடுத்து கட்டிப்பிடித்து காம்பிரமைஸ் ஆவது போல் ஒரு பதில் ட்வீட்டை போட்டுவிட்டு அடுத்த ட்வீட்டிகளேயே ஒரு வெடிகுண்டை வைத்தார் நடிகர் கிச்சா!. yes, ‘எனக்கு இந்தி தெரிந்ததால், நீங்கள் சொன்ன கருத்துகள் எனக்கு புரிந்தது, இதுவே நான் கன்னடத்தில் பதில் அளித்திருந்தால் என்னவாகியிருக்கும்? நாங்களும் இந்தியர்கள் தானே!” எனக்கூறி சோலியை முடித்தார். ‘கிச்சானாலே இளச்சவாயன்னு நினைச்சிங்களே!’ பேஸிக்கலாவே நான் வில்லன்மா என
கிச்சா சொல்வது போல் மீம்ஸ்கள் பரந்தன.

இப்படி வடக்கு நடிகர்களுக்கும் தெற்கு நடிகர்களுக்கும் சீரியஸாக போர் நடந்துகொண்டிருக்க, நடுவில் புகுந்தார் கங்கனா. செங்கல்லை எடுத்து சோற்றில் வைத்து, ‘சோத்துல கல் இருக்கு, கல்யாணத்த நிறுத்துங்க!’ என கவுண்டமனி சொல்வது போல
சமஸ்கிருதம் தான் தேசிய மொழி எனக்கூறி அனைவரின் இதயத்துடிப்பையும் பதம் பார்த்தார். அதற்கு மேல் அதை பற்றி சொல்லி உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பில்லை.

பஞ்சாயத்துகள் இப்படி சென்றுகொண்டிருக்க, தெற்கில் இருந்து இந்திக்கு ஆதரவாக ஒரு அரிய வகை குரலை கொடுத்திருக்கிறார் நடிகர் ‘சுஹாசினி மணிரத்னம்’. இந்தி ஒரு நல்ல மொழி அதை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இந்தி பேசுகிறவர்கள்
நல்லவர்கள். அதனால், அவர்களுடன் பேச வேண்டும் என்றால் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என இனிமையாக பேசியிருக்கிறார். அருணாச்சலம் படத்தில் மேடை ஒன்றில் எதை எதையோ பேசிவிட்டு, ‘அதனால் தான் சொல்கிறோம் காத்தவராயனுக்கு ஓட்டு போடுங்க என்று செந்தில் சொல்வார். அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை! நீங்களும் சம்பந்தப்படுத்திக்கொள்ள வேண்டாம்.

மேலும், என்னுடைய சமயல்காரர்கூட இந்தி தான் பேசுவார், இந்தி கத்துக்கமாட்டேன் என்று அடம் பிடித்தால் சாப்பாடு கிடைக்குமா? எனும் கிடுக்குப்பிடி கேள்வியையும் முன்வைத்துள்ளார். உங்களுக்கு சாப்பாடு வேணும்னா you speak mam..why
us! என்று இணையவாசிகள் கேட்டு வருகின்றனர்.

சுஹாசினி கருத்து குறித்து நடிகர் அமீரிடம் கேட்டபோது, ‘இந்தி பேசுவபவர்கள் நல்லவர்கள் என்றால், தமிழ் பேசுபவர்கள் கெட்டவர்களா?’ என்று கொதித்துள்ளார். மேலும், இந்தி தெரியாத மக்கள் வெளியேற வேண்டும் என சொல்கிறார்கள்

அப்படியென்றால் நாட்டை விட்டு வெளியேறவும் தயார்!’ என்றும் பதிலடி கொடுத்துள்ளார். இப்படி கோலிவுட்டில் தொடங்கிய போர் குரல் டோலிவுட், பாலிவுட் என ஒரு சவுண்ட் அடித்து மீண்டும் கோலிவுட்டுக்கே திரும்பி அடுத்த ரவுண்டுக்கு தயாராகிவருகிறது. இதற்கிடையில், இயக்குநர் ரஞ்சித், நடிகர் சிரஞ்சீவி, நடிகரும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்டோர்களும் ‘சார்பட்டா’ கபிலன் போல் புகுந்து ஆளுக்கொரு குத்து விட்டு சென்றனர்.(அதைப்பற்றி கட்டுரையின் அடுத்த பார்ட்டில் பார்க்கலாம்)

இந்த கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு குட்டி கதை சொல்ல ஆசைபடுகிறோம். கரடியை வேட்டையாட காட்டுக்கு போகும் புலிக்கேசி அம்புகளை தொடுத்துக்கொண்டே இருப்பார். அனைத்தையும் கேட்ச் பிடிக்கும் கரடி Beast mode-ல் அதை உடைத்துப்போடும். The rest is history

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.