கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1ம் தேதி சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவருக்கு நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூன் 8ம் தேதி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டியிருந்தது. எனினும், உடல்நல பாதிப்பு காரணமாக வேறு தேதியில் ஆஜராக அனுமதி கோரியதால், அவரை ஜூன் 23ம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத் துறை தெரிவித்தது.
இந்நிலையில், அவர் டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டுவிட்டரில் மகளிர் காங்கிரஸ் வெளியிட்ட பதிவில், “மதிப்பிற்குரிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைந்து குணமடைய வாழ்த்துகிறோம். லட்சக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் அவருக்காகப் பிரார்த்தனை செய்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “கொரோனா தொடர்பான பாதிப்புகளால் மதிப்பிற்குரிய சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமாக உள்ளார். அவர் குணமடைய வாழ்த்து கூறிய அனைவருக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்டோரும் அவர் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர்.
-மணிகண்டன்








