தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் சிரமப்படுகின்றனர் என குற்றம்சாட்டியுள்ளார்.
வழக்கமாக மருந்து கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு அனுப்பும் தமிழ்நாடு மருத்துவக் கழகம், சில மாதங்களாக போதிய மருந்துகளை விநியோகம் செய்வதில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அரசு மருத்துவமனைகள் உள்ளூரிலேயே மருந்து கொள்முதல் செய்யுமாறு உத்தரவிட்டதாகவும், நிதி நெருக்கடியால் போதிய மருந்து வாங்க முடியாமல் தவிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், உயிர்காக்கும் மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை, வைட்டமின் மாத்திரைகள் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர்.
https://twitter.com/maiamofficial/status/1569551595926618113?t=SroMN_pc6Lz3JpIY3_QFrw&s=08
அரசு மருத்துவர்கள் சிலர், கடைகளில் மாத்திரை வாங்கிக் கொள்ளுமாறு நோயாளிகளிடம் தெரிவிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் அவதிப்படுகின்றனர். உடனடியாக போதிய அளவு மருந்து கொள்முதல் செய்து, மருத்துவமனைகளுக்கு விநியோகிக்குமாறு தமிழ்நாடு அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-இரா.நம்பிராஜன்








