கடலில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்குச் சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் சிக்கிக்கொள்வதால் ‘சுருக்கு மடி வலை’ கொண்டு மீனவர்கள், மீன் பிடிக்கத் தடை விதித்துக் கடந்த 2000ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், கடற்கரையிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்துக்குள், ‘சுருக்கு மடி வலை’யை கொண்டு மீன் பிடிக்கலாம் எனக் கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாகக் கூறி, 5 கிலோ மீட்டர் தூரத்துக்குள் ‘சுருக்கு மடி வலை’யை கொண்டு மீன் பிடிக்க அனுமதிக்கக்கோரி மீனவர் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சுருக்கு மடி வலைகள் பயன்படுத்தத் தடை விதித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டது, இந்நிலையில் இந்த சுருக்கு மடி வலையை 5 கிலோமீட்டர் சுற்றளவுக்குப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், 12 நாட்டிகல் மைலுக்கு அப்பலால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கடல் பகுதிகளில் மீன் பிடிப்பதற்கு சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி விட்டுக் கரை திரும்பும் மீனவர்களைத் தமிழ்நாடு அரசு எந்த வித தொந்தரவும் செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும் எனக்கோரியும் விழுப்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவை இன்றைய தினம் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு இந்த மனு தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.








