சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், விரைவில் அவர் ஸ்டான்லி மருத்துவமனையின் கைதிகள் வார்டுக்கு மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை கேளம்பாக்கம் சுசில் ஹரி பள்ளி மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் பேரில், அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக, மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டன.
பின்பு அந்த மூன்று வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனை அடுத்து தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை கடந்த 16ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது சிவசங்கர் பாபாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டுக்கு மாற்றப்படவுள்ளதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.







