பாலியல் தொந்தரவு: கணவரின் முகத்தில் ரசத்தை ஊற்றிய மனைவி!

செஞ்சியில் மதுபோதையில் பாலியல் தொந்தரவு அளித்த கணவன் முகத்தில்  சூடான ரசத்தை மனைவி ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (30). இவரது மனைவி…

செஞ்சியில் மதுபோதையில் பாலியல் தொந்தரவு அளித்த கணவன் முகத்தில்  சூடான ரசத்தை மனைவி ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (30). இவரது மனைவி குப்பம்மாள் (28). இவர்களுக்கு 3 குழந்தைகள்
உள்ளனர். செஞ்சியில் தின்பண்டங்களை பேருந்துகளில் சென்று கூலிக்கு விற்பனை
செய்து வரும் நடராஜன் அதிக அளவில் மதுவிற்கு அடிமை ஆகியுள்ளார். இதனால், தினமும் தான் சம்பாதிப்பதை வீட்டிற்கு எடுத்து வராமல், குடித்துவிட்டு வந்ததாகக்
கூறப்படுகிறது. இதனால், நடராஜனை அவருடைய மனைவி குப்பம்மாள் கண்டித்ததால் அடிக்கடி பிரச்சினை செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் போதைக்கு அடிமையாகிய நடராஜன் மனைவியைக் கொடுமைப்படுத்தி உள்ளார்.

இதனால் குப்பம்மாள் கொடுமை தாங்க முடியாததால் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் கணவர் மீது புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் நடராஜனை விசாரணைக்கு அழைத்த செஞ்சி அனைத்து மகளிர் காவல் துறையினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மீண்டும் பிரச்சினை செய்தால் காவல் நிலையத்தில் தகவல் கூறும்படி குப்பம்மாளிடம் காவல் துறையினர் கூறியுள்ளனர்.

நடராஜன் மீண்டும் மது போதையில் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதுதொடர்பாக மீண்டும் காவல் நிலையத்தில் குப்பம்மாள் புகார் தெரிவித்த நிலையில், நடராஜனை போலீசார் மீண்டும் விசாரணைக்கு அழைத்து எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது மனைவி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஏற்கனவே நடராஜ் இரண்டு முறை தனது கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்டு உயிரிழப்புக்கு முயன்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு நடராஜன் மதுபோதையில் குப்பம்மாளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதில், ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மனைவி
குப்பம்மாள் சூடான ரசத்தை நடராஜன் முகத்தில் ஊற்றியுள்ளார். இதில், முகம் வெந்த
நிலையில் செஞ்சி காவல் நிலையம் முன்பு வந்து மனைவி மீது நடவடிக்கை எடுக்க
வலியுறுத்திய நிலையில் செஞ்சி போலீசார்  அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக நடராஜனை அனுமதித்தனர்.

ஆனால், சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் நடராஜன் அட்டகாசம் செய்தார். இதையடுத்து,
அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு
மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இரண்டு மணி நேரம் போராடி வாகனத்தில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் செஞ்சி அரசு மருத்துவமனை பரபரப்புடன் காணப்பட்டது. இச்சம்பவம் குறித்து செஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.