இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் திருப்பணிக்கு நன்கொடை செய்ய விரும்புவோர் இணையவழி பதிவு செய்து உதவலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோயில்களின் திருப்பணிக்குத் தேவையான நிதியுதவி அல்லது பொருளுதவி வழங்கு வதற்கு பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முன்வருகின்றனர். அவர்களின் உள்ளக் கிடக்கையை செயல்படுத்தும் விதமாகவும் நன்கொடை செலுத்தும் வழிமுறைகளை எளிமைப்படுத்தும் விதமாகவும் இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளம் ( http://www.hrce.tn.gov.in ) வாயிலாக நன்கொடையாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
நன்கொடை செலுத்த பதிவு செய்ய விரும்புவோர் இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்திற்குச் சென்று “நன்கொடையாளர் பதிவு ‘ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் தங்களுக்கு விருப்பமான கோயிலினை தேர்வு செய்து, தங்களது பெயர், முகவரி , கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.
நன்கொடையாளரின் விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்பு ஒப்புகைத் தகவல் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும். நன் கொடையாளர் உள்ளீடு செய்த தகவல்கள் தொடர்புடைய கோயில் நிர்வாகத்திற்கு இணையவழி அனுப்பப்பட்டு சம்பந்தப்பட்ட கோயிலின் நிர்வாக அதிகாரி தொடர்பு கொள்வார்.
நன்கொடையாளர் நேரடியாக இணைய வழியிலேயே நிதியுதவி அளித்து ரசீதினை மின்னஞ்சல் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம். இணையவழி செலுத்துவதில் சிரமங்கள் இருப்பின் நன்கொடையாளர் சம்பந்தப்பட்ட கோயிலுக்கு நேரில் சென்று மின்னஞ்சல் முகவரி வழியாக பெறப்பட்ட ஒப்புகை அட்டையை காண்பித்து ரொக்கமாக கோயில் நிர்வாகியிடம் செலுத்தி ரசீதினை பெற்றுக்கொள்ளலாம்.
ஏதும் சிரமங்கள் இருந்தால் 044-28339999 என்ற தொலைபேசி எண்ணில் உதவி மையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் .இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.