கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்புக்கு ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்புக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கிடையே கோடை வெயில் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டுமென அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் அதற்கான முன்தயாரிப்பு பணிகள் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் இணையவழியில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்களது மாவட்டத்தில் உள்ள நிலைமை குறித்து நேற்று என்னிடம் காணொளி காட்சியின் வாயிலாக விவரங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து இரண்டு தேதிகளை தமிழக முதலமைச்சரிடம் வழங்கியுள்ளோம். அவர் எதனை தேர்வு செய்கிறாரோ அந்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறியிருந்தேன். அதன்படி மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நீட்டிக்கப்படுகிறது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 7 ஆம் தேதி திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அன்பில் மகேஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையில் ஜூன் மாதம் 7-ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்,” என பதிவிட்டுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் @mkstalin ஆணைக்கிணங்க, கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையில் ஜூன் மாதம் 7-ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.@tnschoolsedu
— Anbil Mahesh (@Anbil_Mahesh) May 26, 2023
- பி.ஜேம்ஸ் லிசா