திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டை தாலுகா கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மோகித் என்ற மாணவன் ஏழாம் வகுப்பு பயின்று வந்தார். இன்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்திருந்த மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்தபோது, பள்ளி கட்டிடத்தின் கைப்பிடி சுவர் திடீரென இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் மோகித் என்ற மாணவன் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார். உடனடியாக சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவனை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவனின் தந்தை சரத்குமார் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனைகயில் திரண்டு, பள்ளி கட்டிடத்தின் பாதுகாப்பற்ற நிலை மற்றும் அலட்சியமே மாணவனின் உயிரிழப்புக்கு காரணம் எனக் குற்றம்சாட்டினர். மேலும் அவர்கள், மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப மாட்டோம் எனக் கூறி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பள்ளி கட்டிடத்தின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது அரசு பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.







