மகனை பள்ளி ஆசிரியர் கடுமையாக தாக்கியதாக கூறி மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை முகப்பேர் சாலையில் வசிப்பவர் யுவராஜ் – வாணி தம்பதியினர். இவர்கள் வீட்டின் அருகில் தள்ளு வண்டியில் பிரியாணி கடை நடத்தி வருகின்றனர். இவருடைய மகன் கேவினேஷ் முகப்பேரில் உள்ள பாரதி வித்யாலயா என்கிற தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றபோது, சக மாணவரின் ஜாமென்ட்ரி பாக்ஸ் உடைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கேவினேஷ் தான் அதனை உடைத்ததாக கூறி சக மாணவன் வகுப்பு ஆசிரியை அனிதாவிடம் முறையிட்டுள்ளார். அதனை கேட்ட ஆசிரியர் கேவினேசை அழைத்து கண்டித்ததோடு, பிறம்பால் இரு கைகளிலும் மாறி மாறி அடித்துள்ளனர். மேலும் வகுப்பறையில் சக மாணவர்கள் முன்னிலையில் முட்டு போட வைத்து கண்டித்துள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்ததும் வலிதாங்க முடியாமல் கேவினேஷ் அழுதுள்ளார். அவரது பெற்றோர் பார்த்து விசாரித்தபோது, கையில் ரத்தக்கட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பள்ளியில் நடந்தவற்றை கேட்டு ஆத்திரமடைந்த யுவராஜ் – வாணி தம்பதியினர், இது தொடர்பாக நொளம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் போலீசார் பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியை அனிதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
– இரா.நம்பிராஜன்








