அரசு பள்ளி ஆசிரியை எழுதுவதா பாடம் நடத்துவதா ‘தாயை கவனிப்பேனா என கண்ணீர் விட்டு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை, கல்வி முறைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதில் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், பள்ளி மேலாண்மை குழு பணி, எமிஸ் இணையதள பதிவுகள் என, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணிச்சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்கு பாடமெடுப்பதை மறந்து, மொபைல் போனும் இணையதளமுமாக பணியாற்ற வேண்டியுள்ளது’ என ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்
அதன்படி, அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் கண்ணீர் கண்ணீருடன் பேசிய வீடியோ வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில், ‘இன்று ஞாயிற்றுக்கிழமை. நான் எழுதுவதா, நாளைக்கு பள்ளிக்கு செல்வதற்கு தயார்படுத்துவதா, சமையல் செய்வதா, அம்மாவை கவனிப்பதா, இந்த வாரத்தின் துணிகளை துவைப்பதா. நாளை, மாணவர்களுக்கு பாடமெடுப்பதற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை’ என, கண்ணீர் விட்டு அழுதபடி, தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதை பல்வேறு சமூக வலைதளக் குழுக்களிலும் பகிர்ந்து வரும் ஆசிரியர்கள், இதுதான் இன்றைய ஆசிரியர்களின் நிலை, கண்ணீர் விடும் நிலைக்கு தான் பள்ளிக் கல்வித்துறை எங்களைத் தள்ளியுள்ளது என்று கருத்து தெரிவித்து அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.







