பார்வை மாற்றுத் திறனாளிகள் எந்தவித கஷ்டமும் இல்லாமல் அரசின் மாதாந்திர உதவித்தொகை திட்ட பலன்களை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பிற மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1,500 வழங்கப்படும் நிலையில், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1000 மட்டுமே வழங்கப்படுவதாக கூறி, பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கும் பாரபட்சமின்றி ஓய்வூதியம் வழங்கக் கோரி நேத்ரோதயா என்ற அமைப்பு கடந்த 2018ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது.
அந்த மனுவில், பிற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயல்படுத்தி வருவதாகவும், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தை சமூக நலத்துறை செயல்படுத்துவதால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. அதனால், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களையும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரப்பட்டது.
இந்த வழக்கில், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு உதவிகளை பட்டியலிட்ட தமிழக அரசு, பொது வேலை வாய்ப்பில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் அவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுவதாக விளக்கமளித்தது.
மேலும், அவர்களுக்கு உதவித் தொகைகள் மத்திய அரசு திட்டம் மூலம் வழங்கப்படுவதால் சமூக நலத்துறை திட்டத்தின் மூலம் அமல்படுத்தப்படுவதாகவும், பார்வை மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகளை பெற மாவட்டம் தோறும் வருவாய் கோட்டாட்சியர்கள் அதிகாரிகளாக நியமித்து, அவர்களின் தனிப்பட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என அரசுத்தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இந்த உத்தரவாதத்தை பதிவு செய்த பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு, அரசின் உத்தரவாதத்தின் அடிப்படையில் பார்வை மாற்றுத் திறனாளிகள், எந்தவித கஷ்டமும் இல்லாமல் உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகள் பெறுவதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், ஆயிரம் ரூபாய் உதவித்தொகையுடன் வேலையில்லா பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு, அவர்களின் கல்வித்தகுதிக்கேற்ப 600 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், “அரசு மற்றும் தனியாரில் வேலைவாய்ப்பு பெறும் தகுதி பெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகளை மற்ற பிரிவு மாற்றுத் திறனாளிகளுடன் ஒப்பிட முடியாது. உடல் நலம் பாதிக்கப்பட்ட, வயதான பார்வை மாற்றுத் திறனாளிகளை, மற்ற பிரிவினருக்கு இணையாக கருதுவது குறித்து அரசு பரிசீலிக்கலாம்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.








