அதிமுகவின் பொதுக் குழுவை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்குத்தான் இருப்பதாக தினகரன் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலை தேறியதையடுத்து மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறார் சசிகலா.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே அதிமுக கொடியுடன் கூடிய காரில் சசிகலா சென்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. அதிமுகவின் உறுப்பினராக அல்லாத சசிகலா எப்படி கட்சிக் கொடியை பயன்படுத்தலாம் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வியை முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில் பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அதிகாரம் இருப்பதால்தான் அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தினார் என்று கூறினார். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என்றும், கட்சியின் பொதுக் குழுவை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்குதான் உள்ளது எனவும் தெரிவித்தார். ஒரு வார ஓய்வுக்குப் பிறகு சசிகலா சென்னை திரும்புவார் எனக் குறிப்பிட்டார் தினகரன்.