தமிழ்நாட்டில் பாலரும், தேனாறும் ஓடுவதற்கு பதிலாக, சாராய ஆறு ஓடிக் கொண்டிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, எக்கியர்குப்பம் கிராமத்தில், கள்ளச் சாராயம் அருந்தி முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளச் சாராயம் அருந்தியவர்களில் இதுவரை 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். கள்ளச் சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு கண் பார்வை, சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பலர் அவரச சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். சித்தாமூரில் போலி மதுபானம் அருந்தி 5 பேர் இறந்துள்ளனர். இது துயரமான சம்பவம்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை. திமுகவைச் சேர்ந்தவர்களே கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. போலி மதுபானம் விற்பனை செய்பவர்கள் அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி விற்பனை செய்கிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் இத்தனை உயிர்களை இழந்து உள்ளோம். அதிமுக ஆட்சியில் போலி மது விற்பனையை தடுக்க குழு அமைக்கபட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அது இல்லை. இரண்டே நாளில் 1600 பேர் கைது செய்யப்படுகிறார்கள். மது விற்பனை அரசுக்கு தெரிந்து இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதற்கு முழு பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக வேண்டும்..விலை மதிக்க முடியாத உயிர்களை இழந்துள்ளோம். தமிழ்நாடு முழுவதும் தடையில்லா கள்ளச்சாராயம் விற்பனை செய்யபடுகிறது. இதற்கு ஆளும் கட்சியினர் துணை போகின்றனர்.இதனை தடுக்க கூறியிருந்தோம். அதனை செய்யவில்லை. ஆட்சி பொறுப்பு ஏற்றபோது தேனாறும் பாலாறும் ஓடும் என்று கூறினார்கள். ஆனால் இன்று சாராய ஆறுதான் ஓடிக் கொண்டுள்ளது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள்.
அரசாங்கமே மது பானம் அருந்த ஆதரவு கொடுக்கிறது. திருமணம் விளையாட்டு மைதானத்தில் மது பானம் குடிக்கலாம் என அரசாங்கம் கூறுகிறது. செந்தில்பாலாஜி பத்து சதவிகிதம் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. முதலில் அமைச்சரை பதவி நீக்க வேண்டும். சமூக போராளிகள் எங்கு போனார்கள் என்று தெரியவில்லை அரசின் கைகூலியாக செயல்படுகிறார்கள். திமுகவின் கூட்டனியில் உள்ளவர்கள் இச்சம்பவம் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் சாடினார்.
- பி.ஜேம்ஸ் லிசா









