கடலூர் சிப்காட் பாய்லர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தொழிற்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடலூர் அருகே சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள சிப்கார்ட் வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் ஒன்றான பூச்சி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தொழிற்சாலையில் செயல்படும் இயந்திரம் திடீரென வெடித்ததை அடுத்து, தொழிற்சாலை முழுவதும் தீ பரவி, புகை மண்டலமானது. இங்கு பணியிலிருந்த ஊழியர்கள் அனைவரும் உள்ளே சிக்கிக்கொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், அவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த தீவிபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு வந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் ஆகியோர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் பாய்லர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையே, உயிரிழந்த வர்கள் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தொழிற்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.







