மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.
மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழகம் தற்சார்பு அடைவதற்கான வழிமுறைகள் குறித்து கடந்த 11ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்வரின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு சிறப்புத் தொகுப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30 சதவீத மூலதன மானியம் இரண்டு ஆண்டுகளுக்குள் வழங்கப்படும்.
10 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு 30 சதவீத மூலதனமானியம் 5 ஆண்டுகளில் வழங்கப்படும். இத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் ஆண்டுக்கு ஆறு சதவீத வட்டி மானியத்துடன் கடன் வழங்கப்படும். மேலும் இந்த நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிப்காட்/சிட்கோ நிறுவனங்கள் மூலம் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.







