நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், 50 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 385 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. கடந்த 18-ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ராய்ப்பூரில் நடந்த 2-வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று மதியம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 81 பந்துகளில் 101 ரன்களும், சுப்மன் கில் 78 பந்துகளில் 112 ரன்களும் குவித்தனர். இந்த சதத்தின்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 30வது சதத்தை பூர்த்தி செய்து, ரிக்கி பாண்டிங்கின் சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்தார்.
இறுதியாக, 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ஜேகப் டஃபி மற்றும் பிளேர் டிக்னர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.