அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே நீரு பூத்த நெருப்பாய் இருந்து வந்த மோதல் ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலுக்கு பின்னர் பெரும் பூகம்பமாய் வெடித்துள்ளது. அறிக்கைகள், பேட்டிகள், உருவப் படங்கள் எரிப்பு, சுவரொட்டி ஒட்டுதல் என இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கிருஷ்ணகிரி வந்திருந்த கட்சியின் தேசிய தலைவர் நட்டா அதிமுக தலைவர்களை விமர்சிக்க வேண்டாம் என்று பாஜக நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இதனால் அண்ணாமலையும், அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்தாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்கவும்: அதிமுக பொதுச்செயலாளர் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!
இந்நிலையில் சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை தமிழகத்தில் தனியாக இருந்தால் மட்டும் தான் பாஜகவை வளர்க்க முடியும் என்று குறிப்பிட்டார். பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச பிரதமர் மோடியிடம் நேரம் கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சாதாரண தொண்டனாக கட்சி பணிகளை தொடர்வேன் என்று திடீரென அவர் அறிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அரங்கில் கூடியிருந்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். கட்சியின் மூத்த நிர்வாகி நாராயணன் திருப்பதி இதுகுறித்து அண்ணாமலையிடம் மேடையிலேயே விளக்கம் கேட்டதாகவும், அதற்கு அண்ணாமலை ஆதரவாளர்களும் நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது கட்சியின் மையக் குழுவில் பேச வேண்டிய கருத்தை ஏன் இப்படி தொண்டர்கள் மத்தியில் பேசுகிறீர்கள் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியதாகவும் தெரிகிறது.