மாதா, பிதா, கூகுள், தெய்வம் என மாறிவிட்டதாகவும், கூகுள் உதவியை நாடினால் தேடல் இல்லாத நிலை உருவாகும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடி அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 32 ஆண்டுகளில் தனிமனித கண்டுபிடிப்பு என்று எதுவும் சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லாதது ஏக்கமாக உள்ளது என்றார். பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்கள் இதனை கருத்தில் கொண்டு தங்களது செயல்பாடு வகுத்துக் கொள்ள வேண்டும்.
கல்வி ஒன்றே சமுதாயத்தில் சமத்துவத்தை தரக்கூடியது. மாணவர்கள் குறிப்பாக பட்டம் பெற்றவர்கள் சமுதாயத்தில் பலருடன் பழக சாதிக்க தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் நீங்கள் சாதிப்பதன் முதல் படியாக அமையும் அனுபவம் தான்
மிகப்பெரிய நன்மையை தரும். தற்போதைய தொழில்நுட்ப வசதியோடு கல்வி கற்ற மாணவர்கள் அவர்களுக்கான இடத்தை அவர்களே தேர்வு செய்வார்கள் இருப்பினும் பெற்றோர்கள் அக்கறையால் கவலைப்படுகிறார்கள்.

மாதா பிதா குரு தெய்வம் என்பதற்கு பதிலாக தற்போது மாதா பிதா கூகுள் தெய்வம் என மாறிவிட்டது. இப்படி எதற்கெடுத்தாலும் கூகுள் உதவியோடு தெரிந்து கொள்வதில் கவனம் செலுத்தினால் தேடல் என்பது இல்லாத நிலை உருவாகி விடும். இதில் கவனமுடன்
செயல்பட வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தினார். சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக்கூடிய வகையில் தங்களது கல்வியை கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிவதில் வெற்றி காண வேண்டும் என்றார்.







