அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட மாநில நெடுஞ்சாலைகளை மாநில அரசுகளிடமிருந்து 25 ஆண்டு காலத்திற்கு கையகப்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
மும்பையில் இன்று நடைபெற்ற இந்திய தேசிய உறுப்பினர்கள் பரிமாற்ற சங்கத்தின் 12 வது சர்வதேச மாநாட்டில், காணொலி காட்சி மூலம் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட மாநில நெடுஞ்சாலைகளை மாநில அரசுகளிடமிருந்து 25 ஆண்டு காலத்திற்கு கையகப்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்ட பின்னர் இவை 4 அல்லது 6 வழி நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும்.
இந்த நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு சுங்கக் கட்டணம் வசூலிக்கும். இதனால் 12-13 ஆண்டுகளுக்குப் பின் இந்த மாநில நெடுஞ்சாலைகளிலிருந்து வட்டி மற்றும் நிலம் கையகப்படுத்தும் செலவுகள் உட்பட முதலீடும் முழுவதும் முழுமையாக திரும்பக் கிடைத்துவிடும்.
நாட்டில் 27 பசுமை விரைவு நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையிலிருந்து பெங்களூருக்கு இரண்டு மணி நேரத்தில் பயணம் செய்யும் சாலைப் பணிகள் முடிவடைந்துவிடும். தில்லி -ஜெய்பூர் 2 மணி நேரத்திலும், தில்லி -அமிர்தசரஸ் 4 மணி நேரத்திலும், தில்லி -ஸ்ரீநகர் 8 மணி நேரத்திலும் , தில்லி -மும்பை 10 மணி நேரத்திலும் பயணம் செய்ய ஏதுவாக பசுமை விரைவு நெடுஞ்சாலைகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும்” என்று தெரிவித்தார்.







