அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்பதற்காக ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக பால் வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனங்களில் பணி வழங்குவதாகக் கூறி ரூ. 3 கோடி முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜி விசாரணை நடைபெறும் மாவட்ட காவல் எல்லைக்கு வெளியே செல்லக் கூடாது. காவல் நிலையத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி ஜாமீன் வழங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், மேற்கண்ட விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஜூன் 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ள அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி வழங்க வேண்டும். குறிப்பாக, விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருப்பதால் அதில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அதனால் முன்ஜாமீன் வழங்கப்பட்டபோது விதிகப்பட்ட நிபந்தனைகளை நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு தளர்த்தி அனுமதி வழங்க வேண்டும். மேலும், இந்த காலகட்டத்தில் எனக்கான மருத்துவப் பரிசோதனைகளையும் முடித்துக் கொள்வேன் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வழக்கு கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, ஹீமா கோலி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜராகி அதிமுக கட்சியின் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். அதனால், முன்னதாக வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளில் 5 நாட்கள் மட்டும் தளர்வு வழங்க வேண்டும். இதுதொடர்பாக மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, நீதிபதி ஹீமா கோலி, கட்சியின் பொதுக் குழுவில் கலந்துகொள்ளவில்லை என்றால் ஒன்றும் ஆகிவிடாது. மேலும், இதுதொடர்பான மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டும் இந்த அமர்வில் விசாரிக்க முடியாது எனக் கூறி அவரது கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, ஹிமா கோலி அமர்வில் இன்றைய தினம் மனு விசாரணை நடைபெற்றது. அப்போது, ராஜேந்திர பாலாஜி தரப்பில், பொதுக் குழுவில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும். இது ஒரு முக்கியமான கூட்டம் என கூறப்பட்டது. அதற்கு ராஜேந்திரபாலாஜி இல்லாமல் அந்த கூட்டம் நடைபெறாது என்று ஏதாவது உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கட்சியில் மாவட்ட செயலாளர் என்பதாலும், இந்த கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் நடைபெற உள்ளதாலும் இது ஒரு முக்கியமான விவகாரம். எனவே, ஜாமின் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என தெரிவித்து ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-ம.பவித்ரா