கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் இனிமேல் வரவே வராது என எடுத்து கொள்ளமுடியாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமானதை அடுத்து, தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர், தாம்பரம் அரசு நெஞ்சக மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டினை அவர் ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மா.சுப்பிரமணியன், கொரோனா தொற்றின் எண்ணிக்கை பரவலாக கூட தொடங்கி இருக்கிற சூழலில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி தொற்று அதிகம் உள்ள இடங்களில் கள ஆய்வு செய்தும், ஆய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டது என்றார்.
நேற்றைக்கு மட்டும் செங்கல்பட்டில் அதிகப்படியாக 95 பேருக்கு தொற்று இருந்தது. இன்றைக்கு அது 100-ஐ கடக்க வாய்ப்பு இருப்பதால் இன்று செங்கல்பட்டில் ஆய்வு செய்து வருகிறோம். தொற்று பாதிக்கபட்டவர்கள் நலமாக இருக்கிறார்கள். சென்னையில் தினமும் 2500 பேருக்கு பரிசோதனை செய்து வந்த நிலையில், மேலும் 2500 பேருக்கு அதிகரித்து தினமும் 5 ஆயிரம் பேருக்கும், பரிசோதனை செய்யப்படும் என கூறினார்.
பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணியுமாறு கேட்டு கொண்ட அவர், அரசு நெஞ்சக மருத்துவமனையில் 100 படுக்கைகளும்,சித்தா மருத்துவமனையில் 200 படுக்கைகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 100 படுக்கைகளும் தற்போது தயாரக உள்ளது என தெரிவித்தார்.
கொரோனாவால் உயிரிழப்பு இனிமேல் வரவே வராது என எடுத்து கொள்ளமுடியாது என்றும், கடந்த 2 மாதங்களில் உயிரிழப்பு இல்லாமல் இருந்து வந்த நிலையில், நேற்று தஞ்சை சேர்ந்த 18 வயது இளம் பெண் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அவருக்கு நீண்ட நாள் காய்சல் இருந்துள்ளது. ஆனால் அவர் காலதாமதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
– இரா.நம்பிராஜன்







