அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை சாலையோர உணவகத்தில் நிறுத்தம் செய்ய உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும் என்றும், பயணிகள் அருந்துவதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கழிவறையை உபயோகப்படுத்தும் பயணிகளிடம் கட்டணமாக அதிகபட்சம் ரூ.5/- வரை வசூலிக்கலாம் என்றும் உணவகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : சூரியனை ஆய்வு செய்ய செப்.2-ம் தேதி ஏவப்படுகிறது ’ஆதித்யா’ விண்கலம் – இஸ்ரோ அறிவிப்பு!!
உணவகத்தில் விற்கப்படும் உணவு பொருட்களின் விலைபட்டியல் பலகை பயணிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும் என்றும், உணவகத்தில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் நியாயமான விலையில், M.R.P. விலையை விட அதிகமில்லாமல் இருக்க வேண்டும் என்றும், பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளுக்கு கணினி (Computerised Bill / Cash Bill) மூலம் ரசீது கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உணவகங்களில் கழிவறை, சுகாதாரம், உணவின் தரம், சுவை, விலை, உட்புற பராமரிப்பு மற்றும் சேவையை அடிப்படையாக கொண்டு மதிப்பீடு (Rating) கொடுக்கப்படும் என்றும், 5ல் 2 மதிப்பெண்களுக்கு குறைவாக மதிப்பீடு பெறும் உணவகங்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும் போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.







