காரில் முந்திசெல்வதில் ஏற்பட்ட போட்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் சகோதரரின் பேரனை மற்றும் பேத்தியின் கன்னத்தில் அறைந்ததாக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் காவல்நிலையத்தில் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியின் சகோதரர் மகன் கண்ணன், சென்னை கே.கே.நகர் அதுல்யா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மகன் சுபாஷ் சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர், தமது தாயார் மற்றும் சகோதரி பாரதி ஆகியோருடன் அண்ணாநகரில் இருந்து கே.கே.நகர் 100 அடி சாலை வழியாக காரில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இவர்கள் காருக்கு பின்னால் கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. இருவரது காரும் ஒருவரை ஒருவர் முந்தி செல்வதில் போட்டி ஏற்பட்டுள்ளது. அசோக்நகர் 100 அடிசாலை லக்ஷ்மன் ஸ்ருதி சிக்னல் சந்திப்பில் வரும்போது சுபாஷ் வந்த காரை ஹோண்டா சிட்டி கார் முந்திச்சென்று மடக்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி : பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கு தனித்தனி அறைகள் – சாதிய மோதலை தடுக்க நடவடிக்கை
காரில் இருந்து இறங்கிய பெண்ணுக்கும், சுபாஷுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சுபாஷின் சகோதரி பாரதி, அந்த பெண்ணிடம் எதற்காக எவ்வளவு வேகமாக காரை ஓட்டிவருகிறீர்கள் என சத்தம் போட்டுள்ளார். இதில் அந்த பெண்ணுக்கும், பாரதிக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. உடனே அந்த பெண் போனில் யாருக்கோ தகவல் கொடுத்தார்.
சிறிது நேரத்தில் பைக்கில் வந்த நபர் கீழே இறங்கி வந்ததும் பாரதியையும், சுபாஷையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பாரதியின் உதட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த போக்குவரத்து போலீசார் இவர்களை சமாதானம் செய்து அசோக்நகர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அசோக்நகர் உதவி ஆணையாளர் தனசெல்வம் நேரில் விசாரணை செய்துள்ளார். இதில், சுபாஷையும், அவரது சகோதரியையும் தாக்கியது இந்துசமய அறநிலையத்துறை ஆணையரும், ஐஏஎஸ் அதிகாரியுமான கண்ணன் என்பதும், காரில் வந்தது அவரது உறவினர் விஜயலக்ஷ்மி என்பதும் தெரியவந்தது. ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் குடிபோதையில் இருந்ததாக சுபாஷ் தரப்பினர் குற்றம்சாட்டியதால் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
சுபாசும், அவரது சகோதரி பாரதியும் தாக்கப்பட்ட சம்பவம் தெரியவந்ததும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, செய்தித்தொடர்பாளர் கோபண்ணா உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும், அசோக்நகர் காவல் நிலையத்தில் நள்ளிரவில் குவிந்தனர். இதனால் ஸ்டேஷன் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குடிபோதையில் தாக்கிய ஐஏஎஸ் அதிகாரி கண்ணன், அவரது உறவினர் விஜலட்சுமி, ஓட்டுநர் முத்துராஜா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவுசெய்து கைது செய்யவேண்டும் என கே.எஸ்.அழகிரி மற்றும் நிர்வாகிகள் போலீசாரிடம் வற்புறுத்தினர். ஒருபுறம் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், மறுபுறம் காங்கிரஸ் கமிட்டி தலைவரும் மாறிமாறி வற்புறுத்தியதால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.
பின்னர் சுபாஷ் கொடுத்த புகாரின்பேரில் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன், அவரது உறவினர் விஜயலட்சமி, கார் ஓட்டுநர் முத்துராஜா ஆகியோர் மீது ஆபாசமாக பேசுதல், காயப்படுத்துதல், அபாயத்தை ஏற்படுத்தும் கருவி மூலம் தாக்குதல் நடத்துவது மற்றும் கொலை மிரட்டல் விடுதல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல விஜயலட்சுமியும் தம்மை சுபாஷ்,, பாரதி உள்ளிட்ட 3 பேர் மீதும் ஆபாசமாக பேசி தாக்கியதாக புகார் மனு கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அசோக்நகர் காவல் நிலையம் விடிய, விடிய பெரும் பரபரப்பாக காணப்பட்டது.