இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 94வது வாரியக் கூட்டம் தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவர் எஸ்.நடராஜன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தை பொதுப்பணிகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து உரையாற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய அவர், தனியார் முதலீட்டு துறைமுகங்கள் அமைப்பதற்கு மிகவும் சாத்தியமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு கடல்சார் வாரியம் 1076 கிலோ மீட்டர் நீளக்கடற்கரை பகுதியில் சாத்தியமான இடங்களில் சுற்றுப்புறச்சூழல் மற்றும் மீன்பிடி வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாமல் பல்வேறு சிறு துறைமுகங்களை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறது என்றார்.
மேலும், ஆழ்கடல் துறைமுகங்கள் அமைப்பதற்கு சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்தல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு (இலங்கை) பயணிகள் படகு போக்குவரத்தை துவங்குதல், கடற்கரைச் சார்ந்த நீர் விளையாட்டுகள் ஆகியவற்றினை உருவாக்குவதற்கான முயற்சிகளையும் ஆராய்ந்து வருகிறது என தெரிவித்தார்.
அத்துடன், ஒன்றிய அரசின் சாகர்மாலா திட்டத்தின்கீழ், கடலூர் துறைமுகத்தை மேம்படுத்தி 35 ஆண்டுகளுக்கு பிறகு, அதை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விவேகானந்தர் பாறையில் தோணித்துறை நீட்டிப்பு, விவேகானந்தர் பாறை மற்றும் அய்யன் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் தொங்கு பாலம் ஆகிய பணிகள் துவக்கப்பட்டுள்ளன என கூரினார்.
அத்துடன் இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவக்குதல், மிதக்கும் தோணித்துறைகள் அமைத்தல் ஆகியவற்றிற்கான கருத்துருக்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு நிதியுதவி கோரப்பட்டுள்ளது என்றார்.