எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வேண்டி நள்ளிரவில் தியானம் செய்த ராஜேந்திர பாலாஜி!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தியானம் செய்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தாணிப்பாறை சர்வேஸ்வரர் கோயில் மற்றும் தியான நிலையம் அமைந்துள்ளது . இந்த கோயிலில் 18 சித்தர்கள் மற்றும் விநாயகர், வராகி அம்மன், பைரவர், கருப்பசாமி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சுவாமிகள் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.

இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டியும் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி நள்ளிரவு ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கோயிலில் சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்டார். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.