ராஜஸ்தானில் 41 வேட்பாளா்கள் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆதரவாளர்கள் யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. அங்கு நவம்பா் 23-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தானில் பாஜக அதிக தொகுதிகளை இழந்து தோல்வியைத் தழுவியதால் பாஜக தலைமைக்கு வசுந்தரா ராஜே சிந்தியா மீது அதிருப்தி உள்ளதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், 70 வயதாகும் வசுந்தராவுக்கு பதிலாக மாநில அளவில் அடுத்த கட்டத் தலைவர்களை உருவாக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக தேர்தல் குழு உள்பட தேர்தல் தொடர்பான முக்கிய குழுக்களில் வசுந்தரா ராஜே இடம் பெறவில்லை.
ஆனால் ஏற்கெனவே இருமுறை ராஜஸ்தான் முதலமைச்சராக இருந்துள்ள வசுந்தராவை இந்த முறையும் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு எதிராக பாஜக தலைமை உறுதியான முடிவை எடுத்துள்ளது. சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் இதுவரை அறிவிக்கப்பட்ட வேட்பாளர்ளையும் சேர்த்தால் மொத்தம் 18 எம்.பி.க்களும், 4 மத்திய அமைச்சர்களும் பேரவைத் தேர்தல் வேட்பாளர்களாகியுள்ளனா்.
ராஜஸ்தானில் அறிவிக்கப்பட்ட 41 வேட்பாளா்களில் 3 பேர் மட்டுமே பெண்கள். 6 எஸ்.சி. தொகுதி, 10 எஸ்.டி. தொகுதிக்கும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.