நாளை தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான செயல்திட்டங்களை, அக்கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில், மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி , ”அனைத்து திருடர்களும் ஏன் ‘மோடி’ என்ற ஒரே குடும்பப்பெயரை வைத்துள்ளனர்?” என்று பேசியதாக சர்ச்சை எழுந்தது.
அதனடிப்படையில் , பாஜக எம்எல்ஏ-வும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, ராகுல்காந்தி ஒட்டுமொத்த ‘மோடி’ சமூகத்தையும் இழிவுபடுத்தி விட்டதாக கூறி குஜராத் மாநிலம், சூரத் குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இதையும் படியுங்கள் : மருத்துவருக்கு பரிசளித்த நோயாளி – காரணம் தெரிந்தால் உங்கள் மனமும் உருகும்!!
இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி எனவும், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குவதாகவும் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வதாக மக்களவை செயலாளர் உத்பால் குமார் சிங் அறிவித்தார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாளை (27.03.2023) தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான செயல்திட்டங்களை, அக்கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பில், சட்டமன்றத்திற்கு வரும் உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை அணிய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். ’ராகுல் காந்திக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம் என்ற பதாகைகளை ஏந்தி குழுவாக சட்டமன்றத்திற்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், ராகுல் காந்திக்கு ஆதரவாக, சட்டமன்றத்தின் வேலை நேரத்தில் பேசவேண்டும் என்றும் கூறியுள்ளார். சட்டமன்றத்தை விட்டு வெளியே வராமல், இரவு உள்ளிருப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.








