சாம்பியன்ஸ் டிராபி | அடித்து நொறுக்கிய ரச்சின் ரவீந்திரா… வங்காளதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை அறிவித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 236 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷாண்டோ 77 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அதன்படி, நியூசிலாந்தின் தொடக்க வீரராக களமிறங்கிய வில் யங் டக் அவுட் ஆனார். தொடர்ந்து களம் இறங்கிய கேன் வில்லியம்சன் 5 ரன்னிலும், கான்வே 30 ரன்னிலும் வெளியேறினர். ரச்சின் ரவீந்திரா மற்றும் டாம் லாதம் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இதில் சிறப்பாக ஆடிய ரச்சின் ரவீந்திரா சதம் அடித்து அசத்தினார். அவர் சதம் அடித்த நிலையில் 112 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து க்ளென் பிலிப்ஸ் களம் இறங்கினார். மறுபுறம் ஆடிய டாம் லாதம் அரைசதம் அடித்த நிலையில் 55 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து மைக்கேல் பிரேஸ்வெல் களம் இறங்கினார். இறுதியில் நியூசிலாந்து அணி 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 240 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.