புதுச்சேரியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 2011ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் 650 பேர் பல்வேறு பணிகளில் அமர்த்தப்பட்டனர். இவர்கள் மருத்துக்கல்லூரி மற்றும் மருத்துவமனை பணிகளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்களில் 400 பேரை பணி நிரந்தரம் செய்யவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டு முதலமைச்சர் ரங்கசாமி அதற்கான உத்தரவை தலைமை செயலாளருக்கு அனுப்பினார். ஆனால் இந்த கோப்பு தலைமை செயலகத்திலேயே நடவடிக்கை எடுக்கபடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பலர் ஓய்வு பெற்று சென்று விட்டனர். சிலர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலர் நிரந்தர ஊழியர்களுக்கு கிடைக்கும் சலுகைகளை அனுபவிக்க முடியாமல் உள்ளனர்.
எனவே பணி நிரந்தரம் செய்யப்பட்ட உத்தரவை அமல்படுத்த கோரி 100 க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் தீடிரென மருத்துவமனை கட்டிடத்தின் மீது கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.







